Showing posts with label படைப்புக்கள் பற்றி... Show all posts
Showing posts with label படைப்புக்கள் பற்றி... Show all posts

Wednesday, May 7, 2025

“டூரிஸ்ட் ஃபேமிலி”

 


எவ்வளவு அழகான அனுபவங்கள்.. அழுத இடங்கள் பல.. “டூரிஸ்ட் ஃபேமிலி” ஒரு மன நிறைவான அனுபவம்..

Friday, July 8, 2022

திரு சு.சந்திரகுமார் அவர்களின் "நஞ்சு மனிதர் - பனுவலும் ஆற்றுகையும்"...



இன்றைய சூழலில் படைப்பு, விமர்சனம் என்பன வாசகநிலைப்பட்டதாக மாறியிருக்கின்றன. வாசிப்பு, எதிர் வாசிப்பு, கட்டுடைப்பு வாசிப்பு, மீள்வாசிப்பு, வாசிப்பின் அரசியல் என்ற சொல்லாடல்கள் தற்பொழுது அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றன. காரணம், வாசிப்பு இன்று முதன்மை பெற்றிருக்கிறது. படைப்பு, வாசிப்பு ஆகிய இரண்டின் பிணைப்பும் பிரிக்க முடியாதவையாக உள்ளன. இதனால் பெரும்பாலும் படைப்புகள் வாசகநிலையில் இருந்தே புரிந்து கொள்ளப்படுகின்றன.

Monday, September 21, 2020

பல தலைமுறைகளுக்கு பகிரக்கூடிய பாரம்பரியப் புலமை அவரிடம் உள்ளது..

ஆரையூர் அருளம்பலம் அவர்களது இரு தென்மோடிக்கூத்து நூல்களுக்கான அறிமுகக்குறிப்பு

பாரம்பரியக் கலைகள் அழிய நேர்ந்தால் சமகாலக் கலைகளுக்கான ஒரு முக்கியமான விளை நிலம் அழிகின்றதென்றே பொருள். இலக்கியத்திற்கும், நேராக வாழ்வில் இருந்து அனுபவங்களை எடுக்கும் பாரம்பரியக் கலைகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளது. தன்னிச்சையாக கட்டற்ற வெளிப்பாட்டை, அதற்கான சூழலை உருவாக்கும் சக்தி பாரம்பரியக்கலைகளுக்குண்டு. இதனால் கலைகளுக்கான சூழல் மாறினாலும் கலைகள் வாழக்கூடிய புதிய சூழலுக்கான புதிய களங்களை உருவாக்கி இப்பாரம்பரியக் கலைகளை நிலைத்து நிற்றலுக்கான அமைப்பாக செயற்படுத்தும் திறன் பாரம்பரியக்கலைஞர்களுக்குண்டு. நாட்டார் இலக்கியங்களில் செறிவையும் அதில் அர்த்த அடுக்குகளையும் எதிர்பார்க்கக் கூடாது என சிலர் கூறுவர். ஆனால் இவற்றோடு சரளமாக, உடனடிவெளிப்பாடாக படைப்புக்களை உருவாக்ககூடிய ஆற்றலுடன் பல பாரம்பரிய கலை விற்பன்னர்கள் நம்மத்தியில் திகழ்கின்றனர். அதன் ஒரு குறியீடாக ஒரு அத்தாட்சியாக எம்முன் ஆரையூர் அருள் அவர்கள் திகழ்கிறார்.

பிறர் அணுகத் துணியாத இலக்கியத் தடங்களில் எல்லாம் நம்பிக்கையுடன் ஈடுபடும் ஓர்மம் இவருக்கிருக்கின்றதென்பதில் எந்த ஐயப்பாடுமில்லை. ஈழத்திலே நாட்டுக் கூத்துக்களைப் பொறுத்தவரையில் அவை அவ்வப்போது, மேடையேற்றப்பட்டு வந்ததைத் தவிர அவை இலக்கியமாக, பனுவலாக எழுதப்படும் முயற்சிகள் அருந்தலாகவே நடந்தேறின. காலவோட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் நவீன நாகரிகமும் கிராம வாழ்க்கையின் சிதைவும் இக்கூத்து மரபுகளையும் அதன் முக்கிய அம்சமான பிரதிகளையும் கேள்விக்குள்ளாக்கின. இன்றைய சூழலில் அது வாழ முடிந்தால் வாழட்டும் என்று அப்படியே விட்டுவிடாமல், அதன் இலக்கியச் சாத்தியப்பாடு குறித்த எண்ணத்தோடு புதிய பனுவல்களை உருவாக்குதல் என்பது அதன் இலக்கியப்பரப்பை ஆழப்படுத்துவதோடு பார்ப்போர் மனத்தில் கூத்து இலக்கியம் சார்ந்த பல்வேறு கனவுகளையும் புதிய தரிசனங்களையும் செயற்பாட்டு உந்துதல்களையும் கிளர்ந்தெழச்செய்வதற்கான ஒரு சூழலைச்சிருஸ்டித்துவிடும். இதற்கு பொருத்தமான கூத்துப்புலவனை காலம் வேண்டி நிற்கிறது. அவ்வாறு நமக்குக்கிடைத்திருக்கும் கூத்தாசிரியனே ஆரையூர் அருளம்பலம் அவர்களாவார்.

கூத்துப்புலவர் என்பார், அடிப்படையில் ஒரு இசையாசிரியனே. பண்டைய கூத்துகளில் பாடகன் ஒருவன் இசைப்பதற்கென்றே இருந்திருக்கிறான் என்பதை சிலப்பதிகாரத்தின் 'அரங்கேற்று காதை'யிலிருந்து நம்மால் அறிய முடிகிறது. அவன் வரிப்பாட்டிற்கும், ஆடலுக்கும் உரிய பொருளை விளக்கி, இயற்சொல், திரிசொல், திசைசொல், வடசொல், ஆகிய சொற்களின் ஓசைகளைச் சுத்தமாகக் கடைப்பிடித்து, அந்த ஓசையின் இலக்கணங்களையெல்லாம் குற்றமறத்தெரிந்த அறிவாளியாயிருக்க வேண்டும் என்பது மரபு. இந்த மரபே கூத்து மரபின் தொடர்ச்சியாயிற்று.

கூத்தின் வெளிப்பாட்டிலே பாடல்களுக்கு முக்கிய வகிபாகம் உண்டு.  மெய்ப்பாடுகளுக்கும் உணர்ச்சிக் கிளர்வுகளுக்கும் உகந்த நடைவேறுபாடுகளையும் தாள லயத்தையும் கொண்ட புதுப்புது யாப்புக்களிற் பாட்டுக்களை இயற்றவேண்டியது கூத்துப்புலவர்களின் பிரதான கடனாயிற்று. கூத்துப் பாடல்களுக்கு ஓசைநயம் உயிர்நாடியாய் அமைந்திருந்ததால் பொருத்தமான யாப்பமைதிகளை கூத்துப் புலவர்கள் நாட வேண்டியிருந்தது. இசையறியாமல் எழுதுவதால் கூத்துப்பிரதியின் தன்மையை இழக்கவேண்டிவரும். எனவே கூத்துப் பற்றிய ஆழமான அறிவும் இயல், இசை, நாடகத் தமிழில் பாண்டித்தியமும் உள்ள ஒருவராலேயே கூத்துப்பனுவலைச் சரியாகப் படைக்க முடியும். இவை ஆரையூர் அருளம்பலம் அவர்களுக்கு மிகத்தாடனமான விடயங்கள். இதற்கு இவரது இராவண சொரூபம், இறைவனும் புலவனும் எனும் இரண்டு தென்மோடிக்கூத்துப்பிரதிகளுமே அத்தாட்சிகள். இராமனின் அம்பறாத்துணி எடுக்க எடுக்கக் குறையாத பாணங்களைக்கொண்டதாம். இராமனின் அம்பறாத்துணி போலவே ஆரையூர் அருளம்பலம் அவர்களின் சொல்வளமும் எடுக்க எடுக்க குறையாதது என அடையாளங்காட்டி நிற்கின்றன இந்தப்பிரதிகள். 

ஒரு செய்யுள் படைப்பிற்கு இன்றியமையாத இருபத்தாறு உறுப்புகளுள் ஒன்றாக தொல்காப்பியத்தில் மெய்ப்பாடு குறிப்பிடப்படுகிறது. தொல்காப்பியரின் கருத்தின் படி மெய் என்பது படைப்பு (செய்யுள்) என்றும், படைப்பினால் சுவைகளைப் புலப்படுத்துவது மெய்ப்பாடு என்றும் கூறப்படுகிறது. 

 ' உய்ப்போன் செய்தது காண்போர்க்(கு) எய்துதல்

 மெய்ப்பா(டு) என்ப மெய்யுணர்ந்தோரே '

என நாடக இலக்கண நூலான செயிற்றியம், உய்ப்போன் (படைப்போன்), காண்போருக்காக (வாசிப்போர்) செய்வது படைப்பு எனக்குறிப்பிடுகிறது. மெய்ப்பாடு வாசிப்பவனிடம் ஏற்படுத்தும் மாற்றம் சுவை எனப்படுகிறது. சுவை என்பதற்கு இளம்பூரணர் 'சுவை என்பது காணப்படு பொருளால் காண்போர் அகத்தில் வருவதோர் விகாரம்' என்கிறார்.

சலனமற்ற மனத்தோடு ஒரு படைப்பை படிக்கத் தொடங்கும் நம்மைத் தன்னுள் இழுக்கும் படியான ஒரு படைப்பு ஏற்படுத்தும் பரபரப்பு, பரவசம், சோகம், சந்தோஷம் என்ற உணர்வுகளால் நம்மை ஆட்கொள்ளுதல் மெய்ப்பாடு ஆகின்றது. பொதுவாகக் கூத்தில் இத்தகு மெய்ப்பாடுகள் பயின்றுவரவேண்டியது அவசியமாகின்றது. ஆக படைப்போனின் உணர்வுகளைப் படிப்போனின் மனதில் இடம்மாற்றச் செய்யும் கலையை இலக்கணமாகத் தரும் மெய்ப்பாட்டியலை கூத்தின் யாப்பமைதி முறைகள் சரியாகப்பேணியிருக்கின்றன. அவை அளவறிந்து பயன்படுத்தும் போதுதான் அந்தக்கூத்திலக்கியத்தின் அனுபவத்திற்குள் எம்மால் செல்ல முடியும்.

தென்மோடிக் கூத்தின் அமைப்பும், அதிற் கையாளப்படும் பாடல் முறைகளும், அதன் உட் பொதியும் செழுமையும் ஒரு தொல்சீர் நெறியின் எச்சங்கள் என்பது நிருபணமாகின்றன. பாட்டின் பொருளுக்கும் வடிவிற்கும் இயைபு உண்டு. உணர்த்தப்படும் பொருளும் அதை உணர்த்தும் வடிவமும் பிரிக்க முடியாதன. தமிழிலக்கிய வடிவமைப்பில் யாப்பமைதிக்கு முக்கிய இடமுண்டு. மரபு வழிக் கூத்துக்களைப் பொறுத்தளவில் ஆடலையும் பாடலையும் ஒருங்கிணைத்து மெய்ப்பாட்டுச் சுவைகளை மிகுவித்தற்குப் பொருத்தமான பல்வேறு யாப்பு வகைகளை கூத்தாசிரியர்கள் கையாண்டுள்ளனர். அவற்றின் தன்மைகளை புலவரும் பயன்படுத்தியிருப்பது பிரதிகளினடியாகப் புலனாகின்றது. 

ஆசிரியப்பாவின் இனங்களுள் ஆசிரிய விருத்தமும் கலிப்பாவின் இனமாகிய கலிவிருத்தமும் மிகப்பரவலாகக் காப்பியங்களில் இடம் பெற்றவை. கம்பராமாயணம்,   பெரியபுராணம்,  சீவகசிந்தாமணி போன்ற பெருங்காப்பியங்களில் இவை ஆளப் பெற்றிருப்பதைக் காணலாம். எவ்வகைக் கருத்தையும், உணர்ச்சியையும் வெளிப்படுத்தவும், நீண்ட கதை நிகழ்ச்சிகளை இனிய ஓசை அமைப்புடன் விளக்கிக் கூறவும் ஆசிரிய விருத்தம் தென்மோடியில் பொருத்தமான யாப்பாக பயன்பட்டிருக்கின்றது. இவரது இரு பிரதிகளிலும் பல இடங்களில் இதனைக் கையாண்டிருப்பதைக்காணலாம். ஏனைய இனங்களைப் போலன்றி ஆசிரிய விருத்தம் சந்த ஒழுங்குக்கு உட்பட்டு வரும். சந்த ஒழுங்கு என்பது முதலடியில் வரும் சீர் அமைப்பு அதே மாதிரியாக ஏனைய மூன்றடிகளிலும் வருதல் வேண்டும். இவ்வமைப்பின் காரணமாக ஆசிரிய விருத்தம் இனிய ஓசை அமைப்பைப் பெறுகிறது. இராவண சொரூபத்தில், 

'ஈழமாம் இலங்காபுரிதன்னை இட்டமோடரச தாண்ட

சூரனாம் இராவண சொரூபமதை துலங்கு நாடகமாப்பாட

பாரதம் தன்னை வெண்கொம்பொடித் தெழுதியளித்த 

வாரணமுகவைங்கர வேழமுகவன் திருவடி காப்பதாமே' என அதன் தன்மையுணர்ந்து பொருத்தமாகப் பயன்படுத்தியிருப்பதைக் காண முடிகின்றது. மட்டக்களப்பு தென்மோடி நாடகங்களிலே கொச்சகம் அதிகமாகப் பாவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கொச்சகங்கள் காய்முன் நிரைவரும் அளவடியாலேயே ஆக்கப்பட்டுள்ளன. அறுசீர் பெற்று வருவன மிகக்குறைவே. விருத்தம் பெறும் இடத்தினைச் சில வேளைகளில் கொச்சகம் பெறுவதனைக் காணலாம். இராவணண் சொரூபத்தில் வரும் இராவணன் கொச்சகமும் மண்டோதரி கொச்சகமும் இறைவனும் புலவனும் பிரதியில் இறைவன் கொச்சகமும் தருமி கொச்சகமும் நக்கீரர் கொச்சகமும் சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இறைவனும் புலவனும் எனும் பிரதியில் இறைவன் கொச்சகம் 

'தலைமைப்புலவனென்ற செருக்கோ மிடுக்கோ தலைக்கனமோ 

புலமை முழுவதுமறிந்த இறைவனென்று அறியானோ...' என சந்த ஓசையுடன் வருகிறது.

தென்மோடிக் கூத்துக்களில் பல இடங்களில் தருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. தரு, மறு தரு, பல்லவித் தரு, தோற்றத்தரு, விளையாட்டுத் தரு, வரவுத் தரு, தர்க்கத் தரு, வண்ணத் தரு, சண்டைத் தரு, சபைத் தரு, ஏணித் தரு, தாலாட்டுத் தரு, தாழிசைத் தரு, கொச்சகத் தரு, ஊஞ்சற் தரு, வழி நடைத் தரு, கலிப்பாத் தரு, தேவாரத் தரு, வாழித் தரு என பல்வேறாக அமைகின்றது. இதுவே கூத்தில் அதகிமாகப்பயன்படுத்தப்படுகின்றது. இந்த இரு கூத்துக்களிலும் கூட இதன் ஆதிக்கத்தினைக்காண முடிகின்றது.

வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி வருவது இன்னிசை வெண்பா எனப்படுகின்றது. கொச்சகம் என்ற பாவினத்தைச் சோக உணர்வு புலப்படப் பாடும் பொழுது அதற்கு இன்னிசை என நாடடுக்கூத்தாசிரியர்கள் பெயர் வழங்கியுள்ளனர். இராவண சொரூபத்திலும் இதன் இலக்கணங்கணங்கள் வழுவாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் வரும் போர் வீரன் இன்னிசை

'அயலவன் மனைவியை அண்ணனவன் கவர்ந்தால்

அவளைக் கொண்டவனுக்கில்லா வார்வமிவனுக்கேன்...' என அமைகிறது. இவரது கூத்துப்பிதிகளில் அகவல், வெண்பா ஆகிய பாக்களும் கலித்துறை, கட்டளைக் கலிப்பா, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், கொச்சகம் முதலான பாவினங்களும் தரு, சிந்து, இன்னிசை, தாழிசை, வண்ணம், தேவாரம் ஆகிய பாவகைகளும் பயன்படுத்தியிருப்பது புலனாகின்றது. அத்தோடு ஆங்காங்கே தென்மோடிக்கூத்துக்குரியதான மொழி நடையிலே வசனங்களையும் பயன்படுத்தியிருக்கிறார்.

ஒரு மொழியை, அதன் இலக்கியத்தை, அதன் இசையை அதன் இயல்பான வழியில் நின்று பாடினால்தான் அது அம்மொழிக்குச் செய்யும் பெருமையாகும். புரியாது எனப் பழக்கப்படுத்தப்பட்டும், புரிந்து கொண்டுவிடக் கூடாது என மிகக் கவனமாக கற்பிக்கப்பட்டும், புலவர்க்கானது என ஒதுக்கப்பட்டும், கிடக்கின்ற தமிழிலக்கண, இலக்கியப் பெரும்பரப்பில் எளிதான நடையில் அமைந்திருக்கும் கூத்திலக்கியம் ஒரு கவனிப்புக்குரியதற்றதாக மாற்றப்பட்டிருப்பது ஒரு இலக்கிய வரலாற்றுத் தவறாகும். இந்நிலையுணர்ந்த ஆரையூர் அருளம்பலம் அவர்களின்  சமூக உணர்வும், கவித்துவ பார்வையையும் நின்று நிதானித்து, எல்லோரும் எளிதில் விளங்கக்கூடிய கூத்துப்பிரதிகளாக வெளிப்படுத்திருக்கின்றன. இதுவே இன்றைய காலத்தின் தேவையுமாகின்றது.


க.மோகனதாசன்,

சிரேஸ்ட விரிவுரையாளர்,

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம்,

கிழக்குப்பல்கலைக் கழகம்.





Friday, January 17, 2020

வீர இராசமாணிக்கம் அண்ணாவியாரது கூத்துப்பிரதிகளுக்கான அணிந்துரை

பாரம்பரியமெனும் செழுமை நிலத்தில் ஆழ வேரூன்றி நிற்கும் பெருமரமாய்  வீர இராசமாணிக்கம் அண்ணாவியார்


பாரம்பரியக்கலைகளின் உள்ளார்ந்த விழிப்பும் தேடலும் உள்ளவர்களது படைப்புலகம் அவர்களது விழிப்பினடியாகவே விரிகிறது. இது இக்கலைசார் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுவோருக்கு ஒரு பாதையினையும் உருவாக்கித்தருகின்றது. காலனித்துவம் உருவாக்கிக் கொடுத்த தற்காலிக சௌகரிய கொட்டில்களில் தஞ்சமடையாமல், பாரம்பரிய படைப்புலகை நிர்மாணிக்கும் பெரும் பொறுப்புக்களை சிலர் ஆங்காங்கே நிறைவேற்றியும் வந்திருக்கின்றனர். அந்த வகையில் பாரம்பரிய இலக்கியப் படைப்பு வெளியில் தனக்கான படைப்புப் பயணத்தை அப்பண்பாட்டுக்குரிய தன்மைகள் கெடாதவாறு மேற்கொண்டு வருபவர் அண்ணாவியார் வீர இராசமாணிக்கம் அவர்கள்.

Tuesday, November 12, 2019

வெல்லவூர் சுபேதனின் "நதியில் நீந்தும் நட்சத்திரங்கள்"

கவிதை நூலுக்கான நயவுரையிலிருந்து நறுக்கியவை...


ஒரு மழை நாளில் வெல்லவூர் சுபேதனும் ஈழக்கவி ரசிகுமாரும் என்னைச்சந்திக்க வந்திருந்தனர். தான் நனைந்தாலும் தனது குழந்தையை நனையாமல் பார்த்துக்கொள்ளும் தாயைப்போல், நனைந்திருந்த தமக்குள்ளிருந்து நனையாமல் வைத்திருந்த நதியில் நீந்தும் நட்சத்திரங்களைத் தந்திருந்தனர்.


Saturday, July 6, 2019

மாணவர்களுக்கு ஒரு தெளிவான கற்றல் அனுபவத்தை தரவல்லது...


வாழ்த்துரை



பல்துறை ஆற்றல் மிகு ஆசிரியனாக திகழும் நண்பன் நாகேந்திரனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது பல்கலைக்கழகம் என்றாலும் அவரது ஆளுமையும் சிந்தனைப்போக்குமே அவரின் தோளில் கைபோட்டுக்கொண்டு தொடர்ச்சியாக பயணிப்பதற்கான பாதையினை உருவாக்கித்தந்திருந்தன. பல்கலைக்கழக காலங்களில் இவர் பங்கு பற்றிய பல்வேறு ஆற்றுகைகளும் காத்திரமான நாடகம் சார் ஆய்வரங்குகளும் இவர் யார்? இவரது ஆற்றல் என்ன? இவரது கருத்துலகம் என்ன? என்பதை சரியாக அடையாளம் காட்டியிருந்தன. எப்பொழுதும் சிரித்த முகத்துடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் நண்பன் நாகேந்திரன் மிக ஆழமான புலமைத்தேர்ச்சியுள்ளவன் என்பதை அவரோடு கதைக்கும் சிறிது நேரத்திலேயே அனைவராலும் புரிந்துகொள்ள முடியும்.

Monday, July 1, 2019

மண்வாசனையை அள்ளி வார்த்தைகளிலும் சித்தரிப்புக்களிலும் அப்பியிருக்கிறார்...

பாரத்தின் 'துளிர் இலை' சிறுகதை நூலுக்கான அறிமுகக் குறிப்பு...


  படைப்பாளிகள் பல்வேறு தளங்களில் தமது அனுபவங்களை படைப்புக்களாக வெளியிடுகின்றனர். மனித வாழ்வியலை படைப்புக்களினூடாக சொல்லும் போது சில அனுபவங்கள் பொது அனுபவங்களாகவும் ஆகிவிடுகின்றன. அவ்வாறான பொது அனுபவங்கள் அப்படைப்பின் அங்கீகாரத்தினை இன்னொரு தளத்திற்கு கொண்டு சென்றுவிடுகின்றன. ஒரு சிறு செய்தியை அல்லது சிறு அனுபவத்தைக் கருவாகக் கொண்டு உரைநடையில் எழுதப்படுவதே சிறுகதையாகும். சிறுகதைகள் தனித்தன்மையைப் பெற்றிருப்பதற்குக் காரணம் பாத்திரங்கள் உணர்வுகளை சொல்லும் விதத்தை மிகச் சரியாகக் கையாள முடியும் என்பதனாலாகும்.

Thursday, June 20, 2019

நம்மைச் சுட்டெரிக்கின்ற வெப்பத்தினை மொழி பெயர்க்க...

ரிஷி வித்ஞானியின் "அரோகரா" கவிதை நூலுக்கான அணிந்துரையிலிருந்து....


       நம்மைச் சுட்டெரிக்கின்ற வெப்பத்தினை மொழி பெயர்க்க மௌனமான ஆர்ப்பரிப்பு ஒன்று தேவைப்படுகின்றது. அந்த வேலையை கவிதை கச்சிதமாகச் செய்துவிடுகிறது. உள்ளதிலிருந்து உணர்ந்ததைச் சொல்வதும் உணரச் செய்வதும் கவிதையாகின்றது. இதனாலேயே கவிதையினை தம்முணர்வின் ஊடகமாகவும் தம்மை ஆக்கிரமிக்கும் அவஸ்தைகளின் பாசையாகவும் பலர் பயன்படுத்துகின்றனர். காலத்தின் கைகளாலும் சில சூழ் நிலைச் சிக்கல்களின் நகங்களாலும் சின்னாபின்னமாக்கப்பட்டு சிதறிப் போய்க் கிடக்கின்ற மனங்களின் வார்த்தைகளை எடுத்து  பலர் கவிதை புனைய முனைகின்றனர். சிலவை வெறும் கூக்குரல்களாகவும் சிலவை ஆத்மாவின் வேர் சென்று உசுப்பி விடுகின்ற விசாரணைகளாகவும் அமைந்துவிடுகின்றன. 

"இறைநிலையுடன் இரண்டறக் கலப்பதற்கு இசை என்ற யோக முறை"

கிரான்குளம் பாலமுருகன் புகழ்பாடும் , கவிஞர் ஜீ. எழில்வண்ணனின் "வேல்நாதம்" இறுவட்டுக்கான அறிமுகவுரை


    சிறகுகளைக்காப்பாற்றிக்கொள்ள பூக்கள் பக்கமே திரும்பாத வண்டு, வேர்களை வாரிச்சுருட்டி தண்ணீரைப்பார்த்து நடுங்கும் மரம், சூரியக்குச்சி எங்கே உரசி விடுமோ என்று உருண்டு உருண்டு ஓடப்பார்க்கும் பூமி, சமூக வலைத்தளங்களில் தொலைந்து போன மனிதர்கள் என அடுக்கடுக்காய் எம்மை சூழ்ந்து நிற்கின்றன அவலங்கள். மௌனச் சுமையுடன் ஓடுவது இப்போது எல்லோருக்கும் பழகிவிட்டது அது நேரத்தின் அவசியமும் கூட. எண்ணற்ற ஞாபகங்கள், பிள்ளைப் பிராயத்து உடைமைகள், முன்னோர் சேர்த்து வைத்த முதுசங்கள், மண்ணின் மகிமைகள், இயற்கையின் இதங்கள், ஊரின் உன்னதங்கள், ஒன்றிணைக்கும் நம்பிக்கைள் என எல்லாவற்றையும் போக்கற்ற ஒரு பெரு வலியின் நடு வழியில் கிடத்திவிட்டு ஒரிரு பெருமூச்சுக்களுடன் மட்டும் கடந்து செல்ல முடிகிறது எம்மால்.

Friday, June 14, 2019

துயரங்களின் பெருமூச்சுச் சுவாலைகளிலிருந்தே எல்லோருக்குமான பிரியங்களை சமைக்க முயன்றிருக்கிறார்...

மெய்யநாதன் கேதீஸ்வரனின் 'சகதிப்புழுக்கள்' நாடகத்திற்கான அறிமுகக்குறிப்பு...  

  அரங்கின் முக்கிய மூலமாக நாடக ஆசிரியர் விளங்குகின்றார். அரங்க நிகழ்வில் அவர் நேரிடையாக பங்குபெற்றாலும், பெறாவிடினும் அவருடைய எழுத்து வடிவில் உள்ள நாடகப் பனுவல் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இந்நாடகப் பனுவலானது வாசகருக்கோ அல்லது பார்வையாளருக்கோ செய்தியினைக் கூறும் பொருட்டே படைக்கப்படுகின்றன என்றாலும் இவை ஒலி, சைகை, படம், வசனம், எழுத்து எனப் பல வடிவத்தில் அமைந்த எண்ணிறைந்த குறிகளின் ஒருங்கிணைவால் கட்டப்படுகிற பனுவல்கள் எனலாம். இவ்வகையான நாடகப் பனுவல் கவிதை வடிவிலோ அல்லது வசன வடிவிலோ இரண்டும் சேர்ந்த வடிவத்திலோ எழுதப்படுகின்றன. 

Thursday, May 23, 2019

"மனசு எத்தனை துண்டுகளாக உடைந்து கிடந்தாலும் அத்தனையும் தானாகவே ஒட்டக்கூடிய ஒரு மாய வித்தையினை இது புரிந்திருக்கிறது"


அழகு தனுவின், மட்.மாங்கேணி சித்தி விநாயகர் ஆலயத்திற்காக பாடப்பெற்ற 'ஓங்கார நாமம் இசைப் பாமாலை' நயவுரை


  இயந்திரங்களுடன் பழகி மனிதர்களைப் புரிந்து கொள்ளவும் உணர்வுகளை, கவலைகளை, கஸ்டங்களை, சந்தோசங்களை பகிர்ந்து கொள்ளவும் தெரியாத ஒருவித தனிமைப்பட்ட வாழ்க்கையினையே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் மன அழுத்தங்களும் மனப்பிறள்வுகளும்

தினேஸ்குமாரின் 'ஜக்கம்மா' ஆய்வு நூலுக்கான அறிமுகக்குறிப்பு


     'இது எங்கள் புனித நிலம்.  ஆறுகளிலும், ஓடைகளிலும் ஒளிவீசிப் பாயும் இந்த நீர் வெறும் நீரல்ல, இது எங்கள் மூதாதையரின் குருதி. நாங்கள் இந்த நிலத்தை உங்களுக்கு விற்றால், இது புனிதமான நிலம் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். இது புனிதமான நிலம் என்பதையும்,

Sunday, May 19, 2019

தீராத பிரார்த்தனையில் திளைத்திருக்கிறது மனசு

"ஆரையம்பதி கண்ணகையம்மனின் புகழ்பாட வந்தோம்" இறுவட்டு பாடல்களுக்கான  நயவுரை...


 இற்றைப்பொழுது தனிமை மிகும் இதயத்தின் இடுக்குகளில் நிம்மதியை தேடிக்கொண்டு தவிக்கிறது. இந்த துயரம் கொடுக்கும் தனிமையின் பெருவலி உள்ளுக்குள் நெருப்பொன்று பூத்த உணர்வாய் அலைகிறது.

Tuesday, May 14, 2019

அழகு தனுவின் 'சுமைகள்' குறுந்திரைப்படத்திற்கான நயவுரை


  ஒரு முப்பது வருடங்களுக்கு முன் தமிழ் இளைஞர்கள் புதுக்கவிதை எழுதுவதில் ஆர்வம் காட்டினர். இன்று அந்த இடத்தைக்குறும்படம் எடுத்துக்கொண்டது. குறுந்திரைப்படங்கள் கருத்தியல் சார்ந்தும் பயன்படுத்தும் நுட்பங்கள் சார்ந்தும் பல தளங்களில் செயற்படுகின்றன.

Wednesday, May 8, 2019

எருவில் மாணிக்க ஜெயந்தன் சில அதீதங்களை படைக்க முயன்றிருக்கிறார்...

கவிஞர் எருவில்  மாணிக்க ஜெயந்தனின் இறுவட்டுக்கான அறிமுகவுரை


  கனத்த மனதுடனும் மௌனச் சுமையுடனும் ஓடுவது இப்போது எல்லோருக்கும் பழகிவிட்டது அது காலத்தின் கட்டாயமும் கூட. நமக்கு தொலைக்காட்சி வந்தது ஆனால் அந்த தொலைக்காட்சி வெளிச்சத்தில் நமது ஆத்மவை தொலைத்து நிற்கிறோம். இந்த மோசமான சூழலில் இருந்து

Tuesday, May 7, 2019

சமகாலத்தை ஒப்பனைகளின்றி நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் ஈழக்கவி ரசிக்குமார்...

   
   அண்மையில் தனது "முட்களின் மேல் உறங்கிய இரவுகள்" கவிதை நூலினை ஈழக்கவி ரசிக்குமார் அவர்கள் எமக்கு வழங்கியிருந்தார். அந்தக்கவிதைகளை வாசித்தபின் அவை பற்றிய பொதுவானதொரு

Monday, May 6, 2019

நாசி துளைக்கும் மண் வாசனை மணக்கவே பேசுகிறார் சீலன்

எஸ்.ரீ. சீலனின் "ஊர்க்குருவியின் உலா" கவிதை நூலுக்கான ரசனைக்குறிப்பு


இந்த ஊர்க்குருவி இத்தேசமெங்கணும் உலாவித் திரிந்திருக்கிறது. அது சும்மா திரியவில்லை. தன் சிறகுகளில் மண்ணின் கனவுகளைச்சுமந்தே அலைந்திருக்கிறது. இந்த உலகில் இருந்து கிராமிய வாசம் இல்லாமல் போய்விடுமோ என்ற பரிதவிப்பில் அக்குருவியின் நினைவின் அடுக்கு சரியத் தொடங்குகிறது. அச்சரிவின் அடிவாரமெங்கும் நீக்கமறச் சிதறும்

Sunday, May 5, 2019

துன்பியலினூடாக ஒரு அரசியல், பண்பாட்டுப்பார்வை


ஏ.ஜி.யோகராஜா அவர்களின்  'புலம்பெயர் நாடக எழுத்துருக்கள்' எனும் நூலுக்கான ஒரு அறிமுகக்குறிப்பு 

மிக மோசமான சமூக நிலமைகளின் கீழ் தான் அற்புதமான படைப்புக்கள் படைக்கப்பட்டுள்ளன. இவை காலங்கள் பல கடந்த பின்பும் கடந்த காலத்திற்குச்சாட்சியாக நிற்கும் அதேவேளை மக்களை விழிப்படையச்செய்யவும் எழுச்சியடையச்செய்யவும் காலத்தின் நிலைமைகளை தெரியப்படுத்தவும் பயன்பட்டன. முரண்களின் மோதல்களை ஒழுங்கமைப்பதுதான் நாடகமாகின்றது. நாடகங்களில் இது

துடித்து வீழ்ந்த சில பொழுதுகளின் 'நோக்காடு'

ஐயாராம் குணசீலன் அவர்களது 'நோக்காடு' நாடகப்பிரதிகள் நூலுக்கான அறிமுக உரை

நெரிக்கப்படும் குரல்வளைகளிலிருந்து பெருங்குரல்கள் உருவாகும் சாத்தியங்களும் ஆங்காங்கே இருக்கவே செய்கின்றன. அது வாழ்வின் தீராத இடைவெளிகளில் நின்றுகொண்டு பெரும் அவலத்தை கறுப்பாக பெருங்குரலெடுத்து பதிவு செய்துவிட்டுச்செல்கிறது. இதைச் சொல்வதற்கோ

Saturday, May 4, 2019

பிரவீனின் 'பஞ்சதீபம்' நூலுக்கான ஒரு அறிமுகக்குறிப்பு


    இன்றைய நியதிகளை சமூகத்தின் மனசாட்சியைக் கட்டமைப்பதில் பித்துநிலையில் எழுந்த கவித்துவச் சொற்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. கவிதைகளாக தூய எழுச்சி நிலைகளாக அவை அடையப்படுகின்றன. தூரங்களைச் சிறகுகளால் கடக்கும் பறவை போல பல இறைநிலைப் பாடல்கள் எம்மை எங்கெல்லாமோ தூக்கிச் சென்றுவிடுகின்றன. அதனை

சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி..

  ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக...