அறம் செய விரும்பு, ஆறுவது சினம் எனத்தொடங்கி ஓரம் சொல்லேல் என முடிகின்ற அறவியல் சார்ந்த ஒரு வாழ்வை முன்னிறுத்தி நிற்கும் ஆத்திசூடி வரிகளை அவதானிக்கும் போது, வாழ்வைப்பற்றி குறிப்பாக மனித இயக்கங்களை கட்டமைக்கும் பெரிய தத்துவங்களை சுருக்கமாக அதே நேரம் தெளிவாகச் சொல்வதாக அமைந்து காணப்படுகின்றன. 'ஆத்திசூடி' என்பது ஆத்தி மாலையைச் சூடியுள்ள சிவனைக் குறிக்கும். ஆத்திசூடி என்பது காப்புச் செய்யுளின் முதல் சொல் ஆகும். அந்தச் சொல்லே நூலுக்குப் பெயராகவும் அமைந்துள்ளது.
ஒர் அடியால் மட்டுமே ஒரு பாடல் அமைந்துள்ளது. இதற்கு 'ஒரோவடி யானும் ஒரேவிடத்து இயலும்' என்ற யாப்பருங்கல விருத்தியுரை மேற்கோள் நூற்பா இலக்கணம் தருகிறது. ஓர் அடியில் இரு சீர்கள் மட்டுமே உள்ளனவாக ஆத்திசூடி அமைந்துள்ளது. வாழ்க்கை குறித்த கவனத்தைத் தருவதாக வெளிப்படும் ஒளவையாரின ஆத்திசூடி வரிகளுக்குப் பின்புலமாக தெளிவான பிரக்ஞா பூர்வமான ஒரு மனம் செயல்படுவதைக் காண முடியும்.
மற்ற உயிரினங்களோடு ஒப்பிடுகையில் அதிக நோய்க்கூறுகளை தன்னகத்தே கொண்டவன் மனிதன்தான். தனது சிறுவலியைக் கூட அதிகமாக பிரஸ்தாபிப்பவன். பிரபஞ்சம் என்ற பெரிய ரகசியத்திற்கு முன் கழிவிரக்கம் கொண்டவனாக தன்னைக் காண்கிறான். வாழ்க்கை என்றால் ஏதாவது அசம்பாவிதம், சிக்கல், எதிர்பாராத நிகழ்வுகள் இருக்கத்தான் செய்யும். சிலர், அடி பட்டு, எலும்பு முறிந்திருந்தால் கூட, பெரிதாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். சிலர், எதையும் மிகைப் படுத்திக் கூறுவதன் மூலம் தாங்களும் துன்பப் பட்டு, சுற்றி இருப்பவர்களையும் ஒரு உணர்ச்சி மிகுதியில் அமிழ்த்தி விடுவார்கள். எனவே தான் ஒளவை சொன்னார், 'மிகைப்பட பேசேல்' என்று. அதிகம் கலவரப்படாது சாதாரணமாக பேசிப் பழக வேண்டும். அப்படிச் செய்தால், மனம் பதட்டம் அடையாது, நிதானம் வரும், பிரச்சனைகளை சரி செய்யும் பக்குவம் வரும்.