இன்றைய சூழலில் வான்காவின் 'நட்சத்திர இரவு – 1889' ஓவியம் பெருங்குரலெடுத்து என்னோடு பேசுகிறது..
நான் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக கடமையாற்றிக் கொண்டிருந்த போது பேராசிரியர் மௌனகுரு sir அவர்கள் விரிவுரைக்காக எனக்குத் தரும் பாடங்கள் பெரும்பாலும் கலை வரலாறு, ஓவிய வரலாறு என்பனவாகவே இருக்கும். வான்கா, கோகான், மொனே, செசான், சல்வடோர் டாலி, பிக்காசோ, ரெனே மக்ரித், லியனாடோடாவின்சி, மைக்கல் அஞ்சலோ, றபாயல், ஆதிமூலம், தனபால், அல்போன்சா, மூக்கையா, மார்க் மாஸ்டர், ஜோர்ஜ் கீத், மங்சுசிறி என நிறைய ஓவியர்களும் அவர்களது ஓவியங்களும் எனக்கு அப்போது அறிமுகமாயின. சிலரது சில ஓவியங்கள் அப்படியே மனதில் ஒட்டிவிடும். பிக்காசோவின் குவார்ணிகா, சல்வடோர்டாலியின் வடிந்தொழுகும் கடிகாரங்கள், வான்காவின் சூரியகாந்தி, கோகானின் சூரியோதயம், மைக்கல் அஞ்சலோவின் ஆதாமின் படைப்பு, ரெனே மக்ரித்தின் பைரனீஸ் கோட்டை போன்றன சில உதாரணங்கள்.