ரிஷி வித்ஞானியின் "அரோகரா" கவிதை நூலுக்கான அணிந்துரையிலிருந்து....
நம்மைச் சுட்டெரிக்கின்ற வெப்பத்தினை மொழி பெயர்க்க மௌனமான ஆர்ப்பரிப்பு ஒன்று தேவைப்படுகின்றது. அந்த வேலையை கவிதை கச்சிதமாகச் செய்துவிடுகிறது. உள்ளதிலிருந்து உணர்ந்ததைச் சொல்வதும் உணரச் செய்வதும் கவிதையாகின்றது. இதனாலேயே கவிதையினை தம்முணர்வின் ஊடகமாகவும் தம்மை ஆக்கிரமிக்கும் அவஸ்தைகளின் பாசையாகவும் பலர் பயன்படுத்துகின்றனர். காலத்தின் கைகளாலும் சில சூழ் நிலைச் சிக்கல்களின் நகங்களாலும் சின்னாபின்னமாக்கப்பட்டு சிதறிப் போய்க் கிடக்கின்ற மனங்களின் வார்த்தைகளை எடுத்து பலர் கவிதை புனைய முனைகின்றனர். சிலவை வெறும் கூக்குரல்களாகவும் சிலவை ஆத்மாவின் வேர் சென்று உசுப்பி விடுகின்ற விசாரணைகளாகவும் அமைந்துவிடுகின்றன.