Tuesday, March 16, 2021

வாழ்வில் நமக்குத் தெரிந்த ஒன்றின் மூலம் தெரியாத ஒரு அற்புதத்தை ஆழ்மனதில் உருட்டிவிட்டுப்போகும் தன்மையுடையவை ஆ.மு.சி.வேலழகன் அவர்களது வார்த்தைகள்


எங்கோ ஏதோ ஓர் குழந்தை துயருறுகையில் தம் பிள்ளைகளை இழுத்து  கட்டியணைத்துக் கொள்வது ஒவ்வோர் தகப்பனின் ஒவ்வோர் தாயின் அனிச்சை மற்றும் எதற்கோ தேற்றிக்கொள்ளும் ஆறுதல். வன்முறை மிகுந்த வாழ்வில் எளியதைப் பற்றிக்கொண்டு அல்லது எளியதன் அழகில் மெல்லிய உணர்வுகளின் வழி கிறங்கி வாழச் சொல்லி அழைப்பவை ஆ.மு.சி.வேலழகன் ஐயாவின் எழுத்துக்கள். இயல்பாய் இரு, சுயசிந்தனையுடன் இரு என்பது அவர் எழுத்துக்களில் வெகுவாய்த்தொனிக்கும், வார்த்தைகளை மீறிய நாதமாக ஒலிக்கிறது. சிக்கலற்ற மொழியும், நனவோடை உத்தியும், நாம் வாழத்தவறி நடுவீதியில் கிடத்திவிட்டுச் செல்லும் அன்றாடத்தைப் புதிதாகத் துலக்கி வைத்து சக மனிதர்களை நேசத்தோடு வாழச்சொல்லி அழைக்கும் எழுத்துக்கள் ஆ.மு.சியினுடையது.

Sunday, March 7, 2021

அவர் எடுத்துத்தரும் அர்த்தமும் அதன் தத்துவமும் ஒரு கனவினை, ஒரு அழகிய வாழ்வினை வாழும்படி கை நீட்டி அழைக்கின்றன.

(ஆரையூர் அருள் அவர்களின் "வில்லடிப்பாட்டு" நூலுக்கான நயவுரை)


வில்லுப்பாட்டானது மக்களின் அகத்திலெழும் உணர்ச்சிகளோடு ஒன்றி வளரும் கலையாகக் காணப்படுகிறது. நாடகத்தன்மை மிகுந்த நிலையில் கதை கூறலில் இது உருவாக்கித் தரும் பயன்பாடுகள் பலவாகும். மரபு வழிக் கதைகள் முதல் இன்றைய அறிவியல் வளர்ச்சி நிலைகள் வரை வாழ்வியலை அதன் தத்துவத்தை எளிதாகக் கூறும் வல்லபம் வாய்ந்தது வில்லுப்பாட்டு. தமிழுக்குத் தனித்துவம் வாய்ந்த இலக்கிய வடிவமாகவும் ஆற்றுகை வடிவமாகவும் வில்லுப்பாட்டு இலங்குகின்றது. இதனால் மிகச்சிறந்த கதைக் கூற்றரங்கு (Narrative Theatre) என்ற நிலையை வில்லுப்பாட்டுப் பெறுகிறது.  மக்களையும் கதையின் போக்கினூடே ஒன்றவைத்துக் கதை கூறும் வடிவமாக, எந்தக் கால அளவுக்குள்ளும் ஒரு கதையினைப் படைத்துக்காட்ட ஏற்ற நாடக வடிவமாக இது திகழ்கிறது. ஆக நம்மோடு இயல்பாக உரையாடக்கூடிய தன்மை வில்லுப்பாட்டுக்குள்ளது. இந்த சாத்தியங்களைக் கருத்தில்கொண்டே, தமிழின் மகத்துவங்களை பண்பாட்டின் நடுவழியில் தவறவிடப்பட்ட வாழ்வை மீள கொணரும் வேட்கையில் பல்கலை வித்தகர் மூ.அருளம்பலம் ஐயா அவர்களால் காலத்தின் தேவைகருதி உருவாக்கப்பட்டிருக்கிறது 'வில்லடிப்பாட்டு' எனும் இந்நூலாகும். இந்தப் புத்தகம் ஆ.மு.சி. வேலழகன் ஐயா அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. 36 புத்தகங்களை உருவாக்கி தமிழன்னைக்கு ஆரமாகச் சூட்டியிருக்கும் அந்தப் பெருமகனாரை நாமும் தலைவணங்கி நிற்கின்றோம்.

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...