எங்கோ ஏதோ ஓர் குழந்தை துயருறுகையில் தம் பிள்ளைகளை இழுத்து கட்டியணைத்துக் கொள்வது ஒவ்வோர் தகப்பனின் ஒவ்வோர் தாயின் அனிச்சை மற்றும் எதற்கோ தேற்றிக்கொள்ளும் ஆறுதல். வன்முறை மிகுந்த வாழ்வில் எளியதைப் பற்றிக்கொண்டு அல்லது எளியதன் அழகில் மெல்லிய உணர்வுகளின் வழி கிறங்கி வாழச் சொல்லி அழைப்பவை ஆ.மு.சி.வேலழகன் ஐயாவின் எழுத்துக்கள். இயல்பாய் இரு, சுயசிந்தனையுடன் இரு என்பது அவர் எழுத்துக்களில் வெகுவாய்த்தொனிக்கும், வார்த்தைகளை மீறிய நாதமாக ஒலிக்கிறது. சிக்கலற்ற மொழியும், நனவோடை உத்தியும், நாம் வாழத்தவறி நடுவீதியில் கிடத்திவிட்டுச் செல்லும் அன்றாடத்தைப் புதிதாகத் துலக்கி வைத்து சக மனிதர்களை நேசத்தோடு வாழச்சொல்லி அழைக்கும் எழுத்துக்கள் ஆ.மு.சியினுடையது.