நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்பதில் நொடி என்றால் என்ன ?
நோய் என்பது தெரியும். உடலுக்கோ மனத்திற்கோ ஏற்படும் நலக்குறைவு. ஒருவர் நோயுறுவதற்கு புறச்சூழலும் காரணமாகலாம். அவருள் நிகழ்வனவும் காரணமாகலாம். நோயில்லாமல் வாழ்வதுதான் பெரும்பேறு. தருமரிடம் வினவப்பட்ட வினா ஒன்று : உலகில் ஒருவர் அடைதற்கரிய செல்வம் எது ? அவருடைய உடல்நலம் (ஆரோக்கியம்) என்பது அன்னார் விடை.
நொடி என்பது தாழ்வுறுதல். அதுநாள்வரை வாழ்ந்த நிலையிலிருந்து வீழ்ச்சி. நொடித்துப் போதல் என்று சொல்வார்கள். நோய் என்பது உடல்நலக்குறைவு. நொடி என்பது திகழ்நலக்குறைவு. பொருளியல் நோக்கு மட்டுமில்லை. நன்னிலை வீழ்ச்சிகள் யாவும் நொடித்துப் போதலே.
உடலாலும் தேய்வின்றி, உள்ள பிற நிலையாலும் தாழ்வின்றி வாழ்தலே நோய்நொடியின்றி வாழ்தல்.
-மகுடேசுவரன்
No comments:
Post a Comment