ஐன்ஸ்டினுக்குப் பிறகு விஞ்ஞான உலகிலிருந்துகொண்டு பிரபஞ்ச புதிர்களின் முக்கியம் எனக் கருதப்படும் கருந்துளை குறித்து தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த ஓர் அதிசய மனிதர் தன்னுடைய 76 வது வயதில் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்.
அவரது 21 வயதில் கழுத்துக்குக்கீழ் இனி இயங்காது ஓரிரு வருடங்களே உயிர் வாழ முடியும் என்றவர்களுக்கு சிந்தனை ஆற்றலால் 76 வயது வரை உயிர்வாழ முடியும் என்று நிரூபித்தவர். நட்சத்திரங்களுக்கு இடைப்பட்ட தொலைவுகளில் உண்மையை அகழ்ந்து அதிலொரு சூரியனை எரியச் செய்தவர்.
சர்வ சாதாரண யதார்த்தங்களை கையாள வேண்டிய நிர்ப்பந்தங்களோடு சமரசம் செய்து கொண்டு பயணிக்கும் சமூகப் பொது மனத்திலிருந்து வேறுபட்டு எளிதில் பிறரோடு பகிர்ந்துகொள்ள முடியாத அனுபவங்களோடு, அப்பார்வைக்கு அப்பால் புலப்படுகிற உள்ளார்ந்த புலனுணர்வுகளை எல்லோருக்கும் புரியும் பாஷையில் மொழி பெயர்த்துத் தந்தவர்.
தலைப்புச் செய்திகளாகவும், அறிவியல் தகவல் குறிப்புகளாகவும் மட்டுமே நம்மிடம் பெரும்பாலும் சஞ்சரிக்கும் எண்ணற்ற விஞ்ஞானப் பிதாமகர்கள் மத்தியில் தொடர்ந்து ஆழ்ந்த வாசிப்புக்கும் அதனையொட்டிய சிந்தனைத் தொடர்ச்சிக்கும் மற்றையவர்களை உந்தித் தள்ளுபவராகவும் மனவுறுதிக்காக தன்னையே உருவகித்துக் கொள்ளச்செய்து இன்னும் புரியாத புதிர்களுக்கான சிந்தனைக் கிளர்வுகளையும் எற்படுத்திச் சென்றிருப்பவர்.
‘கடவுள்’ எனும் கருதுகோள் இல்லாமலேயே இந்தப் பேரண்டத்தின் உருவாக்கம், வளர்ச்சி, இருப்பு, ஏன் நாளைய நிலைமாற்றம், மரணம் ஆகிய அனைத்தையும் விளக்க இயலும் என்பதை அவர் தெளிவாக்கிய அவரது நிரூபணம் இந்தப் பேரண்டத்தில் கடவுளுக்கு இருந்த கடைசி இடத்தையும், வேலையையும் இல்லாது செய்துவிட்டது. தன் சக்கர நாற்காலியையும், கணினிக் குரல்வளையையும், கடைசிவரை துடித்தபடி வேலைசெய்த ஒற்றைக் கன்னத்து தசையையும் வைத்துக் கொண்டே காலத்தை வென்று புதைத்தவர் ஸ்டீஃபன் ஹாக்கிங்.
No comments:
Post a Comment